பிரான்ஸில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்நாட்டின் 3 அணு மின் உலைகள் செயலிழந்துள்ளன.
தென்கிழக்கு பிரான்சில் 5.1 ரிக்டர் அளவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்தே பிரான்ஸ் மின்சார நிறுவனமான ஈ.டி.எப். இன் அணு உலைகள் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் மின்சார உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் ஏ.எஸ்.என். அணுசக்தி பாதுகாப்பு நிறுவனம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
மூன்று அணு மின் உலைகள் செயலிழந்துள்ளதால் பிரான்ஸில் 2,700 மெகாவாட் மின் உற்பத்தி குறைத்துள்ளது.
திடீரென மின் அணு உலைகள் செயலிழந்த போதிலும் தேவையை ஈடு செய்ய போதுமான உற்பத்தி திறன் பிரான்சுக்கு உள்ளது என பிரெஞ்சு மின் வழங்கல் நிறுவனமான ஆர்.டி.இ. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரான்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 4 பேர் காயமடைந்தனர். 30 வீடுகள் சேதமடைந்தன. பல வீடுகளில் சுவர்கள் பலத்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் கூரைகளும் பாதிப்படைந்தன.
இந்த நிலநடுக்கம் காரணமாக லியான், மாண்ட்பில்லியர், அவிங்னான் ஆகிய நகரங்கள் பாதிப்படைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டன என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.